ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கத்தியவாடி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை ஆற்காடு-அருங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்த ஆற்காடு நகர போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.