வேலூர் மக்களவைத் தேர்தல்: பறக்கும் படை சோதனையில் ரூ. 5.89 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 24th July 2019 06:54 AM | Last Updated : 24th July 2019 06:54 AM | அ+அ அ- |

வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையின்போது ரூ. 5.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூரில் இரு வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.57 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிரீன் சர்க்கிள் பகுதிக்கு அருகே பறக்கும் படை அதிகாரி கவியரசன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காரில் சோதனையிட்டனர். அப்போது, அந்த காரில் ரூ.99 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அலுவலர்கள் அதைப் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
முன்னதாக, வேலூர் செல்லியம்மன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு அதிகாரிகள் வாகனச் சோதனை நடத்தியபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.58 ஆயிரத்து 500-ஐப் பறிமுதல் செய்தனர். இத்தொகை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சித்தார்த்தன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதிலிருந்த சந்திரசேகரன் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 3.80 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பூமாவிடம் ஒப்படைத்தனர்.
மாதனூரில்...
மாதனூர் அருகே குருவராஜாபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் வந்த சித்தூரைச் சேர்ந்த செல்வம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.52 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.