வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியது:
வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களை 144 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் சாலை வசதி இல்லாத நெக்னாமலை, காமந்தட்டு ஆகிய இரு கிராமங்கள் மட்டும் 2 தனி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நேரத்தில் இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவதற்கு ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் 20 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் 179 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 28 இடங்களில் மத்தியப் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. மற்ற இடங்களில் 4 பேர் கொண்ட பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு 3 நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, வாக்காளர்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்களிக்கலாம்.