வேலூரில் மாவட்ட ஆட்சியர் பங்களா அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
வேலூர் தொரப்பாடியில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பங்களா அருகே செல்லும்போது, பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் அதில் வந்த இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், இரு இளைஞர்களும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாகாயம் போலீஸார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருச்சியைச் சேர்ந்த மகேஷ், தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.