குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஊராட்சியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சல்மா தலைமையில், காலிக்குடங்களுடன் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த உயர் அதிகாரிகள், முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளனிடம் கேட்டதற்கு, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆணை பெறப்பட்டவுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
மிட்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அடங்கும் மிட்டூர், கொல்லன் வட்டம், அண்ணா நகர், நாச்சியார் குப்பம், மருதாணிக் குப்பம் போன்ற பகுதிகளுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூர்- ஆலங்காயம் பிரதான சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகர்குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தது பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.