அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 43ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் 50 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இதேபோல் அங்கன்வாடி மையங்களிலும் சத்துணவு அளிக்கப்படுகிறது.
கடந்த சில காலமாக சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சமையல் செய்யும் பணியாளர்கள் தூய்மையான முறையில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், சத்துணவு சாப்பிடும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் சமையல் செய்யும் பணியாளர்கள் தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மற்ற உத்தரவுகள்:
ஏற்கெனவே உள்ள சமையல் பொருட்களை முன்வரிசையில் அடுக்கி வைத்து புதிதாக வரும் பொருள்களை பின்னால் வைத்து பயன்படுத்த வேண்டும். வாரம் ஒருமுறை கட்டாயம் ஒட்டடை அடிக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்க வேண்டும்.
இதில் மிக முக்கியமான ஒன்றாக, தினமும் சமைக்கும் உணவை அரை கிலோ அளவிற்கு கண்ணாடி பாட்டிலில் மாதிரிகளை சேகரித்து வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வந்தவுடன் அந்த உணவை குப்பையில் போட்டு விட்டு மற்றொரு பாட்டிலில் அன்றைய தினம் சமைக்கும் உணவை சேகரித்து வைக்க வேண்டும். இதற்காக 2 கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சாப்பிட்டு உடல் உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டாலும் சத்துணவில் என்ன கலந்துள்ளது என்று தெரிந்து கொள்ள, சேகரிக்கப்பட்ட மாதிரி உணவை ஆய்வுக்குட்படுத்தி தெரிந்து கொள்ளலாம். இதைப் பின்பற்றாத பணியாளர்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் மூலம் அந்தந்த வட்டாரங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உணவு சேகரிப்பு மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளனவா? என அரக்கோணம் பகுதியில் வட்டார உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் தேவராஜ் திங்கள்கிழமை சோதனை நடத்தினார். காந்திநகர் நகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பாட்டில்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்ததை அவர் உறுதி செய்தார்.