வேலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தஞ்சி. சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவர் திங்கள்கிழமை காலை நெல்வாய் கிராமத்தில் இருந்து காய்கனிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, வேலூர் மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது, ஆட்டோவில் ஏழுமலை, மற்றொரு ஏழுமலை, கஜேந்திரன், வினோத்குமார், பலராமன், விநாயகம் ஆகியோரும் வந்தனர்.
அந்த ஆட்டோ சாய்நாதபுரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் தஞ்சி உள்பட 7 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.