உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இனி வரும் காலங்களில் வேலூர் மாவட்டத்தின் எந்தவொரு பொது இடத்திலும் அரசியல் கட்சியினர் பதாகைகளை வைக்கக் கூடாது என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் சாலைகளில் டிஜிட்டல் பதாகைகளையும், இதர பதாகைகளையும் வைக்கக் கூடாது. ஏற்கெனவே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார், அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
இனிவரும் காலங்களில் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட, இதர அரசியல் கட்சியினர் மாவட்டத்தின் எந்தவொரு பொது இடத்திலும் டிஜிட்டல் பதாகைகள், இதர பதாகைகளை வைக்கக் கூடாது. இந்த விதிமுறையை மீறி பதாகைகள் வைப்போருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்திலுள்ள அரசியல் கட்சியினர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.