தமிழகத்தில் காலியாக உள்ள குரூப் 1 அரசுப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 5,578 பேர் எழுதினர்.
தமிழகத்தில் துணைஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு துணைப் பதிவாளர், மாவட்டப் பதிவாளர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணி அலுவலர் நிலைகளில் காலியாக உள்ள மொத்தம் 139 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வையொட்டி வேலூர் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரில் மட்டும் 26 தேர்வுக் கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 7,690 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 5,578 பேர் தேர்வு எழுதினர். 2,112 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 20 பேர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர்.
அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. தேர்வைக் கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 6 மொபைல் யூனிட், 26 ஆய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 1 தேர்வை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பார்வையிட்டார். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.