வேலூரில் ரூ. 16.10 லட்சம் காசோலை மோசடி வழக்கில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர், அவரது மனைவிக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூர் விரைவு நீதித் துறை நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
வேலூரை அடுத்த கருகம்புத்தூரைச் சேர்ந்தவர் எம்.கைலாசம் (43). இவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி மருத்துவர் பூங்குழலி (40). இவர் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர்களது உறவினரான தாராப்படவேடு பகுதியைச் சேர்ந்த கே.சி.சுகுமாறனிடம் (52) சொந்தத் தேவைக்காக கைலாசம், பூங்குழலி ஆகியோர் கடந்த 2017 பிப்ரவரி 4 முதல் 24-ஆம் தேதி வரை பல தவணைகளில் ரூ. 16 லட்சத்து 10 ஆயிரம் பணம் பெற்றனராம். அந்தத் தொகையை வட்டியுடன் திருப்பி அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில், பணத்தைத் திருப்பியளிக்காமல் காலதாமதம் செய்து வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர்களது உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பணம் பெற்றதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்த கைலாசம், பூங்குழலி ஆகியோர் அந்த தொகைக்கு இணையாக காசோலைகளை அளித்தனர். ஆனால், வங்கியில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலைகள் திரும்பி வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சுகுமாறன், இதுதொடர்பாக வேலூர் விரைவு நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குச் தொடர்ந்தார்.
அதன்மீது விசாரணை நடத்திய நீதிபதி கனகராஜ், காசோலை மோசடியில் ஈடுபட்ட அரசு மருத்துவர் கைலாசம், அவரது மனைவி மருத்துவர் பூங்குழலி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அத்துடன், காசோலைத் தொகை ரூ. 16.10 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் 3 மாத காலத்துக்குள் சுகுமாறனுக்கு திருப்பியளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.