திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியது: திருப்பதியை அடுத்த கரகம்பாடி சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சில காலடித் தடங்களை அவர்கள் கண்டனர். அதையடுத்து, சிறு குழுக்களாகப் பிரிந்து செம்மரத் தொழிலாளிகளை தேடி வனத்துக்குள் சென்றனர். போலீஸாரைக் கண்டவுடன் அங்கிருந்த தொழிலாளிகள் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டுத் தப்பியோடினர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற போலீஸார், தொழிலாளிகளில் ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த கோபால்(40) என்பது தெரிய வந்தது. திருப்பதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.