திருப்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை அடுத்த ராமக்காபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி தனலட்சுமி (48). இவர் கடந்த 3-ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் தனலட்சுமியின் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதுப்பேட்டை சாலையில் டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி விசாரித்தபோது, அதிலிருந்த இருவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(26), நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (25) என்பதும், அவர்கள் தனலட்சுமியிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் ஓட்டி வந்த காரை சூளகிரி பகுதியில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.