விரைவில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி துரைமுருகன் பேசியதாவது:
தற்போதுள்ள ஆட்சியாளர்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். அதே போல் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.
திமுக மாவட்டச் செயலர் ஆர்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம், மதிமுக மாவட்டச் செயலர் பி.என் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.