ராணிப்பேட்டை சார்-ஆட்சியரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவலம் அருகே ஏரியில் மணல் கடத்திய மாட்டு வண்டியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவலம் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா, உதவியாளர்கள் குமார், சாந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, அங்கு வந்த ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் இளம்பகவத், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 5 பேரின் செல்லிடப்பேசிகளை பறித்துக்கொண்டு சென்றதாகத் தெரிகிறது.
அவரது எல்லையில் வராத பகுதியில் அத்துமீறி வந்து நடவடிக்கை மேற்கொண்ட ராணிப்பேட்டை சார்-ஆட்சியரின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சங்க காட்பாடி வட்டத் தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.