திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர், குடும்பத்தாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று அவரை
மீட்டனர்.
இதையடுத்து அவர் அரசின் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பியதை அடுத்து, அவரது பெயர் ரீட்டு என்பதும் அஸ்ஸாம் மாநிலம் மோரிகாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும்
தெரியவந்தது.
இதையடுத்து மனநல காப்பகத்தினர் அளித்த தகவலின் பேரில், ரீட்டுவின் குடும்பத்தார் வியாழக்கிழமை திருப்பத்தூர் வந்தனர். சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.மோகன் முன்னிலையில் ரீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மனநல காப்பகத்தின் செயலர் சொ.ரமேஷ் உடனிருந்தார்.