7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி இன்று மனு தாக்கல்: வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன் தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நளினி, முருகன் ஆகியோரை அவர்களின் வழக்குரைஞர்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். 
பின்னர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன் கூறியது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் சுமார் 7 மாதங்களுக்கு முன் தமிழக அரசு விடுதலை செய்தது. அதற்கான அனைத்து ஆவணங்களையும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 
ஆனால், தமிழக ஆளுநர் இதுவரை அந்த ஆவணங்களில் கையெழுத்திடவில்லை. அரசியலமைப்புச் சட்டம் 161-ஆவது பிரிவின்படி இந்த ஆவணங்களைப் பெற்ற மறுவினாடியே அதில் அவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்படி கையெழுத்து போடாதது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் 
புறம்பானது.
இந்தக் கோரிக்கையுடன் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) மனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த மனுவில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை தமிழக அரசு 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்ய பரிந்துரை செய்தும் தமிழக ஆளுநர் அந்த விடுதலைக்கான ஆவணங்களில் இதுவரை கையெழுத்து போடாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, உயர் நீதிமன்றம் தமிழக ஆளுநரை உடனடியாக ஆவணங்களில் கையெழுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com