திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குரிசிலாப்பட்டை அடுத்த ஓமகுப்பம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலிக் குடங்களுடன் திருப்பத்தூர்-ஆலங்காயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன், குரிசிலாப்பட்டு போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.