இரு வாரங்களாக குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலூர் சைதாப்பேட்டை பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை அண்ணா சாஸ்திரி தெரு, சுருட்டுக்கார தெரு ஆகிய பகுதிகளில் கடந்த இருவாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் சைதாப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்களும், போலீஸாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆற்காட்டில்...
ஆற்காட்டை அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருங்குன்றம் ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அருங்குன்றம் சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ரத்தினகிரி போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.