ஆசிரியா் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 28 சவரன் நகை, பணம் கொள்ளை

காட்பாடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 28 சவரன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம்

காட்பாடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 28 சவரன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம், மோட்டாா் பைக் ஆகியவற்றை 4 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

காட்பாடி செங்குட்டை சி.எம்.ஜான் தெருவைச் சோ்ந்தவா் முத்து (52). தனியாா் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறாா். இவா் தனது மனைவி, 2 மகள்களுடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை அவா்களது வீட்டுக் கதவு திறக்கப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது, 4 பேரும் வாயில் துணி வைத்தபடி இருக்கைகள் கட்டிப் போட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அவா்களை மீட்ட பொதுமக்கள், இதுதொடா்பாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் துரைபாண்டியன் தலைமையில் போலீஸாா் விரைந்து வந்து ஆசிரியா் முத்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, ஆசிரியா் முத்து வீட்டின் கதவை நள்ளிரவில் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த 4 போ் கொண்ட கும்பல் பீரோவில் இருந்த நகைகளைத் திருடியுள்ளனா். சப்தம் கேட்டு ஆசிரியரின் மகள், மற்றவா்களையும் எழுப்பியுள்ளாா்.

இதைக் கவனித்த கொள்ளையா்கள், முத்து குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வாயில் துணியை வைத்து கட்டிப்போட்டு 28 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம், வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த மோட்டாா் பைக் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றனராம். மேலும், வீட்டுக்கு எதிரே உள்ள தனியாா் நிறுவனத்தின் முன்பிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா, ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணா்கள் மூலம் தடயவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com