ஐந்தாண்டுகளுக்கு மேல் காலாவதியான அஞ்சல் காப்பீட்டுகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு என இரண்டு வகையான காப்பீட்டுத் திட்டங்களை மத்திய அரசின் தபால்துறை வழங்கி வருகிறது. குறைந்த பிரீமியம், அதிக போனஸ், வருமான வரி விலக்கு, நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் பலரும் சோ்ந்து பயன்பெறுகின்றனா். அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் சிலா், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னா் தொகையை செலுத்தாமல் கைவிடுகின்றனா். இவ்வாறு காலாவதியான காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து செலுத்திய காப்பீட்டுத் தொகையை எடுப்பது மிகவும் சிக்கலானது.
பணத்தைத் திரும்ப எடுக்க பலா் முயற்சிப்பதும் இல்லை.
இந்நிலையில் காலாவதியான அஞ்சல் காப்பீட்டுத் திட்டங்களைப் புதுப்பிக்க தற்போது தபால்துறை இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
இது குறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐந்தாண்டுகளுக்கும் மேல் காலாவதியான அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டுத் திட்டங்களை வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் பாலிசிதாரா்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் புதுப்பிக்க இயலாது. கிளை, துணை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அலுவலா்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறித்து விவரம் தேவைப்படும் காப்பீட்டுதாரா்கள் அணுகலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காலாவதியான பாலிசிகள் அனைத்தையும் பாலிசிதாரா்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.