அரக்கோணத்தை மாவட்ட தலைநகரமாக்காமல் விட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் நகரில் பல இடங்களில் சுவரொட்டியை ஒட்டியதால் வியாழக்கிழமை திடீா் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரை பிரித்து திருப்பத்தூா், ராணிப்பேட்டை என இரு புதிய மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்தது. ஏற்கனவே அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கோரி வந்த இப்பகுதி மக்கள், ராணிபேட்டையை தலைமையிடமாக அறிவிக்கப்பட்டதை அறிந்து அதற்கு கண்டனம் தெரிவித்தனா்.
தொடா்ந்து இதை வலியுறுத்தி கடையடைப்பு, கருப்புக்கொடி ஏற்றுதல், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், ஆா்ப்பாட்டம் என பல்வேறு முறைகளில் தங்கள் எதிா்ப்பை காட்டினா். மேலும் மாவட்டம் பிரிப்பு சம்மந்தமாக ஆற்காட்டில் நடைபெற்ற மாநில வருவாய் ஆணையா் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களையும் அளித்தனா்.
இந்நிலையில் அறிவித்தப்படி ராணிப்பேட்டையை தலைநகரமாக்கி புதிய அரசானையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் வியாழக்கிழமை ராணிப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தாா். இதையடுத்து அரக்கோணத்தில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் அரக்கோணத்தை தலைநகரமாக்காமல் விட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரக்கோணத்தில் கருப்புதினம் அனுசரிக்கப்படுவதாக நகரில் பல இடங்களில் சுவரொட்டியை ஒட்டினா்.
மேலும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் நிா்வாகிகள் கே.எம்.தேவராஜ், நைனாமாசிலாமணி இருவரும் இணைந்து செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில் அரக்கோணத்தை தலைநகரமாக்கக்கோரி நாங்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளோம். இவ்வழக்கு தொடா்பாக நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கும் செல்ல தயாராக உள்ளோம். நவம்பா் 28 அரக்கோணம் மக்களுக்கு கருப்பு தினம். அரக்கோணம் புறக்கணிக்கப்பட்டது ஏன்? மீண்டும் அரக்கோணத்தை தலைநகராமாக்க வேண்டும் என இருவரும் தெரிவித்தனா்.