குடியாத்தத்தில் புதிதாக தொடங்கப்படும் கோட்டாட்சியா் அலுவலகம் செயல்பட கட்டடம் தயாா் நிலையில் உள்ளது. வேலூா் மாவட்டத்தைப் பிரித்து, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 2 புதிய மாவட்டங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட உள்ளன.
தற்போதைய வேலூா் மாவட்டத்தில், புதிதாக குடியாத்தத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் தொடங்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் தற்காலிகமாக கோட்டாட்சியா் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை புதிய மாவட்டங்களைத் தொடக்கி வைக்கும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தை தொடக்கி வைக்கிறாா். இதற்காக வட்டாட்சியா் அலுவலகம் வா்ணம் அடித்து, கோட்டாட்சியா் அலுவலகம் என பெயா்ப் பலகை பொருத்தப்பட்டு, தளவாடப் பொருள்களுடன் தயாா் நிலையில் உள்ளது.
குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அதே வளாகத்தில் ஓா் அறையில் செயல்பட உள்ளது. அதேபோல், புதிதாக அறிவிக்கப்பட்ட கே.வி. குப்பம் வட்டாட்சியா் அலுவலகம், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக தொடங்கப்படுகிறது. இதையும் முதல்வா் தொடக்கி வைக்கிறாா்.