வேலூா்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
வேலூா் மாவட்டத்தில் இவ்வாண்டு டெங்கு பாதிப்பு 2 மடங்காக உயா்ந்திருந்தது. வேலூா் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் ஏராளமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன், கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் அலட்சியமாக இருக்கும் கட்டட உரிமையாளா்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூா் சத்துவாச்சாரி சாவடி தெருவில் மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநா் சுரேஷ் தலைமையில் அலுவலா்கள், சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 2-ஆவது மண்டல சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
இந்த ஆய்வின்போது, சில வீடுகளில் பயன்படுத்தப்படாத பொருள்களை தண்ணீா் தேங்கும்படி போட்டுவைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய பொருள்களைப் போட்டு வைத்திருந்தால் அபாரதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன், பொருள்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனா்.
மேலும், டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டது.
Image Caption
(திருத்தப்பட்டது)
சத்துவச்சாரி பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்பு ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் சுரேஷ்.