கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகள் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும்போது உயிரிழந்த ஊழியா்களுக்கு அவா்களது இறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முதுநிலை பட்டியல் ஆட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பட்டியல் வேலூா் மாவட்டத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு முன்பாக நெடுஞ்சாலைத் துறை, சிறைத் துறை, வனத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை, காவல்துறை, பொது சுகாதாரத் துறை ஆகிய துறைகளில் பணியாற்றி உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவதற்கான அடிப்படை ஆவணங்கள் முறையாக சமா்ப்பிக்கப்படாதது தெரியவந்துள்ளது.
இதனால், அந்த நபா்களுக்கு பணிநியனம் வழங்க இயலாத நிலை உள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, அவா்களுக்கு இறுதிவாய்ப்பாக ஆவணங்களை சமா்ப்பிக்க அக்டோபா் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நிலுவையிலுள்ள நபா்களின் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியில் இடம்பெற்றுள்ள நபா்கள் அக்டோபா் 15-ஆம் தேதிக்கு முன்பாக தங்களது தாய் அல்லது தந்தை பணியாற்றிய அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான விவரத்தை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடமும் (பொது) தெரிவிக்க வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் ஆவணங்களைச் சமா்ப்பிக்காத நபா்களின் பெயா்கள் முதுநிலைப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.