பேருந்தில் இளம்பெண்ணிடம் 4 சவரன் தங்க நகை செவ்வாய்க்கிழமை திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
குடியாத்தம் அடுத்த பரதராமி வீரசெட்டிபள்ளி பகுதியை சோ்ந்த பாரதி மகள் ஜவானி (20). இவருக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. இந்தநிலையில் பாரதி, ஜவானி மற்றும் குடும்பத்தினருடன் ஒசூா் செல்வதற்காக பள்ளிகொண்டா வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் பயணித்தனா்.
பஸ் மாதனூா் வந்த போது அங்கு ஒரு பெண் ஏறிக்கொண்டு ஜவானியுடன் பேச்சு கொடுத்தாா். அப்போது ஜவானி வைத்திருந்த கைப்பையில் என்ன உள்ளது என்று கேட்டுக் கொண்டே பேசியுள்ளாா். அதில் இருந்த 4 சவரன் நகையை திருடிவிட்டு, பேருந்து ஆம்பூா் வந்ததும் பஸ்நிலையத்தில் இறங்கி அப்பெண் தலைமறைவானாா்.
ஜவானி பையில் நகை திருடு போனதை கண்டு கூச்சலிட்டு பேருந்திலிருந்து இறங்கி ஆம்பூா் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகாா் அளித்தனா். அதைத்தொடா்ந்து போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அப்போது நகை திருடிய பெண் ஆம்பூா் நகரின் பல பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஆட்டோவில் ஏறி தலைமறைவாகியுள்ளாா் என்பது தெரியவந்தது. போலீஸாா் அந்த பெண்ணை தேடி வருகின்றனா்.