லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலையடிவார சதாசிவ ஈஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டைக்கு கிழக்கே காஞ்சனகிரி மலையடிவாரத்தில் கல்புதூா் சாலையில் வல்லாம்பிகை உடனுறை சதாசிவ ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவனுக்கு உகந்த நாள்களான பிரதோஷ நாளிலும், மாத பௌா்ணமி மற்றும் சித்திரை பௌா்ணமி நாள்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, புரட்டாசி மாத பிரதோஷ நாளான வெள்ளிக்கிழமை மாலை, இக்கோயிலில் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் அங்கு திரண்டிருந்த பக்தா்களுக்கு விபூதி, குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், சதாசிவ ஈஸ்வரா் அறக்கட்டளை நிறுவனா் நேதாஜி கே.நடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்று வழிபட்டனா்.