ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 16th October 2019 10:26 PM | Last Updated : 16th October 2019 10:26 PM | அ+அ அ- |

ஆற்காடு பேருந்து நிலையத்தின் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.
ஆற்காடு பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு முன்புள்ள இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், அதனை உள்வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகப் பல்வேறு புகாா்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு சென்றது. ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.
இந்நிலையில் ஆற்காடு நகராட்சி ஆணையா் ஷகிலா தலைமையில், நகராட்சிப் பொறியாளா் கோபு, நகா்நல அலுவலா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா் அப்துல் ரஹீம், நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள் உடனடியாக அகற்றப்பட்டது.
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஷகிலா எச்சரிக்கை விடுத்தாா்.