உணவு, வேளாண் உற்பத்தி பொருள் பதப்படுத்தலுக்கான 6 வார கால பயிற்சி முகாம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நவம்பர் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
விஐடி பல்கலைக்கழகத்தில் டிபிஐ எனப்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் மையம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து புதிய உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கிட பட்டதாரிகளுக்கு உதவிகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த டிபிஐ மையம் சார்பில் உணவு, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பதப்படுத்தி வணிக வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சி முகாம் நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கி 6 வார காலம் நடைபெறுகிறது. விஐடி டிபிஐ மையத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் 22 முதல் 45 வயது வரை உள்ள பொறியியல், அறிவியல் பட்டதாரிகள், பட்டயச்சான்று பெற்றவர்கள், வேளாண் உற்பத்தி வணிக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சேரலாம்.
இதில், தொழில் முனைவோராக உருவாக்குதல், சந்தைப்படுத்தும் வசதிகளை உருவாக்கித் தருவதுடன் உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு சான்று பெறுவதற்கான வழிமுறை உள்ளிட்டவை குறித்து சில தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாக அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்படவும் உள்ளது.
இப்பயிற்சிக்கு நவம்பர் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ. 3 ஆயிரமாகும். பயிற்சி முழுமையாக முடிப்பவர்களுக்கு வைப்புக் கட்டணம் திருப்பி வழங்கப்படும்.
விண்ணப்பம், மேலும் விவரங்களுக்கு 0416 -2202301, 98942 35124ஆகிய எண்கள் மூலமாகவும், இணையதளங்கள் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.