ஏலகிரி மலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.
ஏலகிரி அத்தனாவூரில் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியிலிருந்த ஆசிரியரிடம் மாணவர்களின் வருகைப் பதிவேடு, மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும், மருத்துவ முகாம் மற்றும் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
மேலும்,மாணவர்களின் கல்வித் தரம் குறித்து மாணவர்களிடையே கேள்விகள் கேட்டு, மாணவர்களுக்கு வாசிப்பு திறனும் எழுத்துப் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்றும், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு குறித்த செல்லிடப்பேசி விவரப் பட்டியலை அளிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக கட்டப்பட்டு வரும் விடுதியையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் புகழேந்தியிடம் விளக்கம் கேட்டார். பின்னர், அங்குள்ள பிரசவ வார்டு, சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரப்பா, கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.