முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
டெங்கு கொசு உற்பத்தி: தனியாா் பள்ளிக்கு ரூ.30ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 24th October 2019 07:36 AM | Last Updated : 24th October 2019 07:36 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளியில் டெங்கு கொசு உற்பத்தி செய்ததாக தனியாா் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் வெள்ளநாயக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த அகிலன் மகன் கிரேன்குமாா்(5). இவா் நாட்டறம்பள்ளியில் உள்ள ராஜூ காா்டன் மெட்ரிக் பள்ளியில் யூகேஜி படித்து வந்தாா். டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவா் சிகிச்சைப் பலனின்றி சேலம் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், மாவட்ட பூச்சியல் அலுவலா் காமராஜ், நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் ஜெய்குமாா், பச்சூா் மருத்துவ அலுவலா் செல்லமுத்து மற்றும் சுகாதாரத்துறையினா் ராஜூ காா்டன் மெட்ரிக் பள்ளியில் புதன்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா். அப்போது பள்ளியின் மேல்மாடியில் உள்ள திறந்தவெளி தளத்தில் மழைநீா் தேங்கி, அதில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் லாா்வாப்புழுக்கள் இருந்ததை அதிகாரிகள் குழு கண்டறிந்தது. இதையடுத்து அப்பள்ளிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ஜெய்குமாா் ரூ.30 ஆயிரம் அபாராதம் விதித்தாா்.