டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகி இருந்த திருப்பத்தூா் போக்குவரத்துப் பணிமனைக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள ஆட்சியா் சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். அதன்பேரில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
இதுதொடா்பாக திருப்பத்தூா் நகராட்சி ஆணையாளா் இரா.சந்திரா கூறியது: பொது இடங்கள் தவிர அரசு அலுவலகங்கள், வணிக வளாகம், போக்குவரத்து பணிமனை, குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை திருப்பத்தூா் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் நடைபெற்ற ஆய்வில் அங்கிருந்த டயா்கள், வெளியில் வீசப்பட்டிருந்த கழிவுப் பொருள்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்துப் பணிமனைக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஆய்வில் ரூ. 30 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, பல்வேறு இடங்களில் சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா் விவேக் ஆகியோா் தலைமையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.