ராணிப்பேட்டையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் அ. முஹமத் ஜான் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
சென்னை} மும்பை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ராணிப்பேட்டை முத்துகடை நான்கு வழிச்சாலைச் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின் விளக்கு கம்பம் கடந்த மாதம் லாரி மோதி முற்றிலும் சேதமடைந்தது. எனவே, அந்த மின்கம்பம் அங்கிருந்து அகற்றப்பட்டதால், இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து விபத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் அ. முஹமத் ஜான் அண்மையில் நேரில் பார்வையிட்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9.10 லட்சம் மதிப்பீட்டில் தலா 18 மீட்டர் உயரத்தில் முத்துகடைச் சந்திப்பு மற்றும் ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகம் எதிரே என இரண்டு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும், காயிதே மில்லத் தெரு, பஜனை கோயில் தெரு, பாறைத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நான்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கும் அவர் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை முத்துகடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் அ. முஹமத் ஜான் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தார்.
இதில், நகர அதிமுக செயலர் என்.கே. மணி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.எம். சுகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.பி.சந்தோஷம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் வெங்கடாச்சலம், பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.