ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றபோது இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதி இளம்பெண் உயிரிழந்தார்.
வாணியம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் மணிகண்டன்(28). இவருக்கும், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா(24)வுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதியர் இருவரும் வியாழக்கிழமை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றனர். மாலை 7 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மலைப் பாதையில் வரும்போது, எதிரே கார் ஒன்று வேகமாக வந்தது.
கார் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பிபோது, தடுப்புச் சுவர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த திவ்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.