வேலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத மொத்தம் ரூ.3.36 லட்சம் கைப்பற்றப்பட்டது.
வேலூர் வேலப்பாடியில் ஒருங்கிணைந்த மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் சென்றன.
அதன்பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துணைக் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி, பிரியா உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற சோதனையில் இணை சார்-பதிவாளர் சிவலிங்கம் மேசையில் இருந்து ரூ.42 ஆயிரம், இதர அதிகாரிகளின் மேசையில் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.