வாணியம்பாடியில் தனியார் பேருந்தில் திடீர் தீ பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
திருப்பத்தூரிலிருந்து வேலூருக்கு தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை மதியம் சுமார் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தை பாஸ்கர் (40) ஓட்டினார். வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வந்த போது, திடீரென பேருந்தின் என்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. அடுத்த சில நொடிகளில் என்ஜினின் கீழே டீசல் கசிந்து தீப்பிடித்தது. இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டது.
பேருந்தில் தீப்பிடித்ததை அறிந்த பெண் பயணிகள் உள்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். உடனே அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்கள், அங்கிருந்து தீயணைக்கும் கருவியைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த வாணியம்பாடி தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் இருக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை முழுமையாக அணைத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.