பேர்ணாம்பட்டு வட்டத்தில் உள்ள 2 ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பேர்ணாம்பட்டு வட்டம், ராஜக்கல் ஊராட்சியில் உள்ள கல்லேரியில் ரூ. 4.18 லட்சத்திலும், செண்டத்தூர் ஊராட்சியில் உள்ள பொன்னியம்மன் ஏரியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரைகளை பலப்படுத்தி அதில் பனை விதைகளை நடவு செய்யவும் அறிவுறுத்தினார்.
பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் செண்பகவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.