வேலூர் மாவட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,791 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ. 9 கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 801 வழங்க உத்தரவிடப்பட்டது.
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 11 நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டம் முழுவதும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், நிலமோசடி, காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் வழக்கு உள்பட மொத்தம் 11,081 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1,791 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
அதன் மூலம் ரூ.9 கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 801 தொகை பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள சமரச தீர்வு மையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் (பொறுப்பு), மாவட்ட சட்டப்பணிக்குழு ஆணையத் தலைவருமான எம்.வெற்றிச்செல்வி தலைமை வகித்தார்.
சட்டப்பணிக்குழு ஆணையச் செயலர் கே.ஆனந்தன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட குடும்ப நல நீதிபதி குணசேகர், மாவட்ட கூடுதல் செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.