சிக்னல் இயங்காததால் நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்பத்தூரில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் காலை, மாலை வேளைகளில் நெரிசலில் சிக்கி தவிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிக்னல் இயங்காததால் நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்பத்தூரில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் காலை, மாலை வேளைகளில் நெரிசலில் சிக்கி தவிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், சார்-ஆட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நகர காவல் நிலையம், தீயணைப்பு அலுவலகம், தலைமை தபால் நிலையம், அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு தினந்தோறும் பல்வேறு அலுவல் காரணமாக திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்துச் செல்கின்றனர். 
இதனால் இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. 
காட்சிப்பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்: திருப்பத்தூர்  நகர காவல் நிலையம் அருகிலும், சேலம் இணைப்புச் சாலை அருகிலும் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் சில நாள்கள் மட்டுமே இயங்கியது. பின்னர்,செயல்படவில்லை. இதுகுறித்து வணிகர்கள்,சமூகஆர்வலர்கள் பலமுறை காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சிக்னல் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் தொல்லைக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த சிக்னலை மீண்டும் இயக்கிட மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
ஷேர் ஆட்டோ தொல்லை: இதுமட்டுமின்றி, திருப்பத்தூர் பிரதான சாலை மிகவும் குறுகலாக உள்ளதாலும், பேருந்து நிலையத்தையொட்டி ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். 
அதேபோல், பேருந்து ஓட்டுநர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர். காவல் துறை அறிவிப்பை மீறி ஷேர் ஆட்டோக்கள் பிரதான சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.  இதனால் ஏற்கெனவே இப்பகுதியில் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, ஷேர் ஆட்டோக்களை பிரதான சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
பொதுமக்கள் தரப்பில் கூறியது:  ஏற்கெனவே பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பிரதான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ள நிலையில், போக்குவரத்து சிக்னலும் இயங்குவதில்லை. இதனால் தினமும் சிறு, சிறு விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன என்று கூறினர். 
இதுகுறித்து டிஎஸ்பி ஆர்.தங்கவேல் கூறியது: 
மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்பேரில், இப்பகுதியில் சிக்னல் விளக்குகளுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. மிக விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com