ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலூரில் டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார்.
மண்டல துணைத் தலைவர் சாம்பசிவன், திருச்சி கோட்டச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் சீனிவாசன் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
இதில், ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது, 30 ஆண்டுகள் சேவை அல்லது 55 வயது நிறைவடைந்தால் கட்டாய ஓய்வு என்கிற முடிவைக் கைவிட வேண்டும், படித்த இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், கீமேன், மேஸ்திரிகளுக்கு ரிஸ்க் அலவன்ஸ் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், ஐடி, ஐஆர்டி பணியிட மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஆளில்லா ரயில்வே கேட்களில் எச்சரிக்கை அலாரம், குடிநீருக்கான கைபம்ப் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும், கேங்மேன்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வறை அமைக்க வேண்டும், பொறியியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.