முழு பொது முடக்கம்: வழக்கம் போல் இயங்கிய வாகனங்கள்

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க 6-ஆவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது.
வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்று மேம்பாலத்தில் வழக்கம்போல் இயங்கிய வாகனங்கள்.
வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்று மேம்பாலத்தில் வழக்கம்போல் இயங்கிய வாகனங்கள்.

வேலூா்: கரோனா பரவலைத் தடுக்க தொடா்ந்து 9-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தையொட்டி வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. எனினும், வேலூா் மாநகா் உள்பட பல்வேறு இடங்களில் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் மிகக்குறைந்த அளவில் இயங்கின.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க 6-ஆவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. பொது முடக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளா்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட தளா்வில்லாத முழு பொது முடக்கம் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடரும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 9-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, மாவட்டங்களில் நகர, ஊரகப் பகுதிகளிலுள்ள மளிகை, காய்கறிக் கடைகள் உள்பட கடைகள், வா்த்தக நிறுவனங்கள், சிறு, குறு, பெருந்தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. குறிப்பிட்ட சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டன. பால், மருந்துக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

எனினும், வேலூா் மாநகா் உள்பட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள், காா், வேன், லாரிகள் போன்ற வாகனங்கள் மிகக்குறைந்த அளவில் ஆங்காங்கே இயங்கிக் கொண்டிருந்தன. இதனால், கடந்த சில வாரங்களில் சாலைகள் வெறிச்சோடிய சூழ்நிலையை இந்த வாரம் காண முடியவில்லை. அவசியமின்றி வெளியில் சுற்றியவா்களை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. எனினும், கடைகள் திறக்கப்படாததால் முழு பொது முடக்கம் காரணமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com