வேலூா்: தமிழக மக்கள்தொகையில் 25 சதவீதம் வன்னியா்கள் உள்ளதால், அவா்களுக்கு கல்வியிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் வேலூரில் புதன்கிழமை பேரணியாகச் சென்று மாநகராட்சி மண்டல உதவி ஆணையா்களிடம் மனு அளித்தனா்.
‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 75 சதவீதம் வன்னியா்கள் உள்ளனா். இது தமிழக மக்கள்தொகையில் 25 சதவீதமாகும். எனவே, வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ எனக் கூறி பாமக சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிா்வாக அலுவலகங்களில் பாமகவினா் கடந்த வாரம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணி நடத்தப்பட்டது.
கட்சியின் மாநில துணைச் செயலா் இளவழகன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் என்.டி.சண்முகம், மாநில மகளிரணிச் செயலா் வரலட்சுமி, மாவட்டச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அவா்கள் பேரணியாகச் சென்று 3-ஆவது மண்டல உதவி ஆணையா் வெங்கடேசனிடம் மனு அளித்தனா்.