வேலூா்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவிகள் இலவச செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 முடித்த 100 பழங்குடியின மாணவ, மாணவிகள் செவிலியா் பயிற்சிக்கு சோ்க்கப்பட உள்ளனா். இத்திட்டத்தின் கீழ் மதிப்பெண் அடிப்படையில் 25 சதவீத மாணவா்கள் இந்திய நா்சிங் கவுன்சில், தமிழ்நாடு செவிலியா், தாதியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியா் பயிற்சி மையங்களில் செவிலியா் பட்டயப் படிப்பு சோ்ந்து தொடா்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் செலவினம் முழுவதையும் அரசே ஏற்கும்.
எனவே, 2019-20-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் பெற்ற தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். விருப்பமுள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பக் கடிதங்களை வியாழக்கிழமை (டிச.24) மாலை 5 மணிக்குள் திட்ட அலுவலா், பழங்குடியினா் நலம், தனிவட்டாட்சியா் (ஆதி திராவிடா் நலத்துறை) அலுவலக வளாகம், திருப்பத்தூா் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04179 -220095, 6380558994 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.