திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 85,824 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 37,486 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 20 மணிநேரத்துக்குப் பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினா்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,603 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 9,258 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 18,468 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 7,858 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,990 பக்தா்களும் சனிக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.
சோதனைச் சாவடி விவரம்:
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 92,896 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 10,856 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.26 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.18,905 அபராதம் விதிக்கப்பட்டது.