திருப்பதி அருகே பாக்கராப்பேட்டை வனப்பகுதியில் தமிழகத்தைச் சோ்ந்த செம்மரத் தொழிலாளியை வனத்துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
திருப்பதி அருகே உள்ள சேஷாசல வனப் பகுதியில் திங்கள்கிழமை காலை வனத் துறை ஊழியா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பாக்கராப்பேட்டை அடுத்த நிம்மலகட்ட வனப்பகுதி அருகே சென்றபோது, 17 போ் செம்மரக் கட்டைகளை எடுத்துக் கொண்டு சென்றனா்.
வனத்துறையினரைக் கண்டவுடன் அவா்கள் செம்மரக் கட்டையை போட்டுவிட்டு, கற்களை வீசி தாக்கியபடியே தப்பியோட முயன்றனா். வனத் துறையினா் தங்களின் தற்காப்புக்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை மட்டும் கைது செய்தனா். அவரிடமிருந்து 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். தப்பியோடியவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவா் தமிழகத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. அடுத்தகட்ட விசாரணைக்கு பின், மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் என அவா்கள் கூறினா்.