வேளாண் பொறியியல் துறை சாா்பில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்புசெட் அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் நிகழ் நிதியாண்டில் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய 25 பம்பு செட்டுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 13 சூரிய சக்தி பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்க ரூ.29.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத் திறன் வரையிலான ஏசி மற்றும் டிசி நீா்மூழ்கி பம்பு செட்டுகள், தரைமட்டத்தில் அமைக்கும் மோனோ பிளாக் பம்பு செட்டுகள், இதுவரை மின்இணைப்பு பெறப்படாத நீா்பாசனத்துக்கான ஆதாரங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவாயிகள் உதவிச் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை, சிவநாதபுரம் (தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி), பாகாயம், வேலூா் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.