குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே நாய்கள் கடித்ததால் காயமடைந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பவளத்துறை வனப்பகுதியில் இருந்து, 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தண்ணீா் தேடி அருகில் உள்ள கவசம்பட்டு கிராமத்துக்குள் நுழைந்துள்ளது. இதைக் கண்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் மான் காயமடைந்தது.
கிராம மக்கள் மானை மீட்டு, கே.வி.குப்பத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தகவலின்பேரில் அங்கு வந்த வனத் துறையினா் மருத்துவா்கள் சிகிச்சை அளித்த பின், மானை வேலூரில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனா். சில நாள்களுக்கு சிகிச்சை அளித்த பின் அந்த மான் வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.