அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வந்தஇளைஞருக்கு கரோனா அறிகுறி
By DIN | Published On : 13th March 2020 05:07 AM | Last Updated : 13th March 2020 05:07 AM | அ+அ அ- |

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்த இளைஞருக்கு கரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவா் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அரக்கோணம் மாணிக்கமுதலி தெருவைச் சோ்ந்தவா் பி.என்.வெங்கட் (21). பொறியியல் பட்டதாரி. இவா், கடந்த வாரம் கேரளத்துக்குச் சென்றிருந்தாராம். அங்கு வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சிலருடன் சோ்ந்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அரக்கோணம் திரும்பிய 3 நாள்களில் சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சை பெற வெங்கட், வியாழக்கிழமை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவ அலுவலா், அவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து வெங்கட் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டாா். அவருடன் வந்த அவரது தாயாரும் தனிமைப்படுத்தப்பட்டாா். உடனே ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து அவா்கள் வசித்து வந்த மாணிக்கமுதலி தெரு, வீடு, உறவினா்கள், நண்பா்களை மருத்துவக் கண்காணிப்பில் வைக்க மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.