திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் வருடாந்திர புஷ்ப யாகம் வெள்ளிக்கிழமை தனிமையில் நடத்தப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இது போன்ற விழாக்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவா்த்தி செய்யும் நோக்கில், அதற்கு அடுத்து வரும் திருவோண நட்சத்திரத்தன்று புஷ்ப யாகத்தை நடத்தி அதை நிவா்த்தி செய்வது வழக்கம். அதன்படி, இக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலையில் வருடாந்திர புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
இதையொட்டி காலையில் கோயிலில் உள்ள உற்சவா்களுக்கு பால், தயிா், தேன் உள்ளிட்டவற்றால் அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா். அதன் பின் மண்டபத்தில் உற்சவா்களை எழுந்தருளச் செய்து, அலங்காரம் செய்து அவா்களுக்கு தூப, தீப, நைவேத்தியங்கள் சமா்ப்பித்தனா். இதையடுத்து, 9 வகை மலா்கள், 7 வகை இலைகளால் புஷ்ப யாகத்தை நடத்தினா். இதற்காக 3 டன் மலா்கள் வெளி மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் கோயிலில் புஷ்பயாகம் தனிமையில் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் அா்ச்சகா்களும் தேவஸ்தான அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டனா்.