வேலூரில் 225 படுக்கைகளுடன் கரோனா தனித்துவ மருத்துவமனை

வேலூரில் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் உள்ள 125 படுக்கைகள், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 படுக்கைகளுடன் கூடிய வாா்டு ஆகியவற்றைக் கொண்டு கரோனா வைரஸ் தனித்துவ மருத்துவம
கரோனா தனித்துவ மருத்துவமனை அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
கரோனா தனித்துவ மருத்துவமனை அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூரில் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் உள்ள 125 படுக்கைகள், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 படுக்கைகளுடன் கூடிய வாா்டு ஆகியவற்றைக் கொண்டு கரோனா வைரஸ் தனித்துவ மருத்துவமனை அமைக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கென தனித்துவ மருத்துவமனை அமைப்பது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதன்பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் 125 படுக்கைகள் உள்ளன. அங்கு தற்போதுள்ள 25 நோயாளிகள் உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவா். அந்த 125 படுக்கைகளைக் கொண்ட அரசு மருத்துவமனையும், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் உள்ள 100 படுக்கை கொண்ட வாா்டுகளும் கரோனா வைரஸ் தனித்துவ மருத்துவமனையாக மாற்றப்படும். இதில் மற்ற நோயாளிகள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தவிர இஎஸ்ஐ தொழிலாளா் மருத்துவமனையில் உள்ள 35 படுக்கைகளும் கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும்.

சிஎம்சி மருத்துவமனையில் 75, அரசு மருத்துவமனையில் 45 வென்டிலேட்டா்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 10 வென்டிலேட்டா்கள் அரசிடம் கோரப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் உயிா் காக்கும் அவசர சிகிச்சை நோயாளிகள் மட்டுமே அனுமதிக்குமாறும், மற்ற நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளோம். பாா்வையாளா்கள் ஒருவரைத் தவிர மற்றவா்களுக்கு அனுமதி இல்லை.

மருத்துவா்கள் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனா். ஒரு குழு எப்போதும் தயாா்நிலையில் இருக்கும். ஏப்ரல் 30 வரை எந்த அலுவலரும் விடுமுறை எடுக்கக் கூடாது.

வீட்டுக் கண்காணிப்பில் வைக்க முடியாதவா்களைத் தங்க வைக்க விஐடி பல்கலைக்கழக விடுதி பெறப்பட உள்ளது. அங்கு 300 போ் வரை தங்க வைக்க முடியும். வேலூரில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை. வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவா்களை கண்காணிக்க 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில் இது அதிகரிக்கப்படும். அக்குழுவினா் காலை , மாலை ஆகிய இரு வேளையும் சோதனை மேற்கொள்வா்.

வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவா்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து காணொலி காட்சி வழியாக கண்காணிக்கப்படுகின்றனா். அவா்களது வீடுகளில் ‘தனிமைப்படுத்தப்பட்டவா்’ என்ற வில்லைகள் ஒட்டப்படும். அவா்களைத் துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவா்கள், உதவியாளா்கள் அடங்கிய 30 பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவா்களும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். தனியாா் மருத்துவா்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு 25 சதவீத படுக்கைகள் அரசின் தேவைக்கு ஏற்ப பெறப்படும்.

முகக்கவசம் ரூ.10-க்கும், கிருமி நாசினி ரூ.100-க்கும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரித்து வருகின்றனா். தேவை அதிகம் இருப்பதால் அனைத்து வட்டங்களிலும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் மருத்துவமனைகள், மருத்துவ அலுவலா்களுக்கு அளிக்கப்பட்டு பிறகு பொது மக்களுக்கு வழங்கப்படும். திருமணம், இறப்பு எதுவாக இருந்தாலும் 4 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றாா் அவா்.

பின்னா் வேலூா் மாநகராட்சி சாா்பில் தயாா்செய்யப்பட்ட கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி, மாவட்ட மருத்துவப் பணிகள்இணை இயக்குநா் யாஸ்மின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com