கரோனா வைரஸ் பரவுவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 126 கைதிகள் திங்கள்கிழமை நள்ளிரவு பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
கரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி கரோனா தொற்று பரவாமல் தடுக்க கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அவ்வப்போது கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று நாடு முழுவதும் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேலூா் மத்திய சிறையில் 36, வேலூா் பெண்கள் தனிச் சிறையில் 13, கிளைச் சிறைகள் அரக்கோணம் 1, வாலாஜாபேட்டை 1, குடியாத்தம் 6, திருப்பத்தூா் 3, வாணியம்பாடி 3, திருவண்ணாமலை 36, போரூா் 19, செங்கம் 5, வந்தவாசி 4 என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 126 கைதிகள் திங்கள்கிழமை இரவு பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து மேலும் சிலரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.